Tamilnadu

2,000 ரூபாய் ஜெராக்ஸ் நோட்டு.. ரூ.4.66 கோடி கள்ளப் பணத்தை மாற்ற முயன்ற கும்பல் : மடக்கிப்பிடித்த போலிஸ்!

.கிருஷ்ணகிரியில் உணவகம் அருகே 10 பேர் கொண்ட கும்பல் தங்களது ஐந்து கார்களை நிறுத்திவிட்டு நீண்ட நேரமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதை கவனித்த குற்றப்பிரிவு போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் அவர்களை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

அப்போது அந்த கும்பல் தங்களின் கார்கள் மூலமாக கிருஷ்ணகிரி நகரையே சுற்றிச்சுற்றி வந்துள்ளனர். இதையடுத்து போலிஸார் 10 பேரையும் சுற்றி வளைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களைத் தெரிவித்தனர்.

இதனால் அவர்களை போலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மகி, ராயக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர், ஈரோடு மாவட்டம் முருகேசன், காவேரிபட்டினம் நாகராஜ், கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஜோஷ் உள்ளிட்டோர் எனத் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கிருஷ்ணகிரி நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்று சோதனை செய்தபோது பல்வேறு நபர்களிடம் பணம் பெறப்பட்டது தொடர்பான ஆவணங்கள் இருந்தது.

இதனை அடுத்து அவர்களிடமிருந்து செல்போன்களை போலிஸார் ஆய்வு செய்தபோது பணத்தை இரட்டிப்பாக்கித் தருவது தொடர்பாகவும் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் 2,000 ரூபாய் நோட்டுகளை வீடியோவாக பதிவு செய்தும் வைத்திருந்தனர். இதனை அடுத்து ராயக்கோட்டையைச் சேர்ந்த சங்கரின் வீட்டில் போலிஸார் சோதனை நடத்தினர்.

இதில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 4 கோடியே 66 லட்சம் டம்மி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் இவர்கள் பயன்படுத்திய ஐந்து கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. போலிஸார் இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணகிரியில் 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள இந்த கும்பலின் முக்கிய நபர்கள் இரண்டு பேரை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: “T-Shirts வாங்க குவிந்த மதுரை மக்கள்.. கடைக்கு பூட்டுப்போட்ட காவல்துறை” : காரணம் என்ன?