Tamilnadu

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை செய்த தந்தை : விசாரணையில் வெளிவந்த 'பகீர்' தகவல்!

கரூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். கூலி வேலை செய்து வரும் முருகேசனுக்கும், பிரியாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால், பிரியா அடிக்கடி அவரது தாய் வீட்டிற்குச் சென்றுவிடுவார். பின்னர் அவரை சமாதானம் செய்து முருகேசன் வீட்டிற்கு அழைத்து வருவார். இந்த தம்பதியருக்கு இது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று முருகேசன் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி பிரியாவை முருகேசன் தாக்கிவிட்டு, இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், குழந்தையுடன் சென்ற கணவன் நீண்டநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் இதுகுறித்து உறவினர்களுடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து மூன்று பேரையும் இரவு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் அடுத்த நாள் ஆவுடையான்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் எட்டிப் பார்த்துள்ளனர்.

அப்போது, முருகேசன் மோட்டார் பம்பை பிடித்துக் கொண்டிருந்தார். மேலும் குழந்தைகள் இருவரும் சடலமாக மிதந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. பிறகு விரைந்து வந்த போலிஸார் முருகேசனையும், குழந்தைகளின் சடலத்தையும் மீட்டனர்.

இது குறித்து முருகேசனிடம் போலிஸார் விசாரணை நடத்தியதில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தம்பதியருக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சம்பவத்தன்று ஏற்பட்ட சண்டை காரணமாக குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார்.

மேலும் இவரும் அதே கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் பயத்தின் காரணமாக மோட்டார் பைப்பை பிடித்துக் கொண்டு உயிர் தப்பித்துள்ளார். இதையடுத்து போலிஸார் முருகேசனை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: “T-Shirts வாங்க குவிந்த மதுரை மக்கள்.. கடைக்கு பூட்டுப்போட்ட காவல்துறை” : காரணம் என்ன?