Tamilnadu

“என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை நிரூபித்து வெளியே வருவேன்” : கடலூர் எம்.பி அறிக்கை!

முந்திரி ஆலை தொழிலாளி பலியான வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார்.

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷூக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணி செய்த தொழிலாளி கோவிந்தராஜ் கடந்த மாதம் 19ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பில் மர்மம் இருப்பதாக கோவிந்தராஜின் உறவினர்கள் போலிஸில் புகார் அளித்திருந்தனர்.

இதுகுறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலிஸார், எம்.பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக முந்திரி ஆலை ஊழியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள நிலையில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் , பண்ருட்டி நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தார். இதையடுத்து பொறுப்பு நீதிபதி கற்பகவள்ளி அவரை 2 நீதிமன்றக் காவலில் அனுப்பி வைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கடலூர் எம்.பி ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிநதராஜ் என்பவரது மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி என் மீது பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தி.மு.கவின் மீது சில அரசியல் கட்சிகள், காழ்ப்புணர்ச்சியுடன் தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டிருப்பது என் மனதிற்கு நெருடலாகவும், தி.மு.கழகத்தின் தொண்டர்களில் ஒருவனாக, கட்சியின் மீதான இந்த விமர்சனங்கள், எனக்கு மிகுந்த வேதனையையும் அளிக்கிறது.

ஆகவே, எனது உயிரினும் மேலான தலைவரின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் என்பதற்காக இந்த வழக்கு தொடர்பாக நான் நீதிமன்றத்தில் சரணடைகிறேன். என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு உரிய ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே வருவேன்” எனத் தெரிவித்துள்ளார்.