Tamilnadu

“56 இடங்களில் 80 கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை” : பிரபல ஹெல்மெட் கொள்ளையன் போலிஸிடம் சிக்கியது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சில மாதங்களாகக் கடைகளை உடைத்து கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாக போலிஸாருக்கு புகார் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து மயிலாடுதுறை போலிஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர், கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹெல்மெட் அணிந்த நபர்தான் அனைத்து இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை போலிஸார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த மர்ம நபர் குறித்து போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறையில் ஒரு கடையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபரை போலிஸார் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

பின்னர் அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சித்திரை விடங்கனைப் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பது தெரியவந்தது. மேலும் 2004ம் ஆண்டில் திருப்பூரில் 7 கடைகளில் கொள்ளையடித்துள்ளார்.

அதேபோல், திருப்பூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 21 இடங்களில் கொள்ளையடித்துள்ளார். சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், பெரம்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 56 இடங்களில் தனது கைவரிசை காட்டியுள்ளார்.

இந்த அனைத்து இடங்களிலும் இரு சக்கர வாகனத்தில் வந்து ஹெல்மெட் அணிந்து கொண்டே கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். லட்சுமணன் பார்ப்பதற்கு போலிஸார் போல் இருப்பதால் பொதுமக்கள் யாருக்கும் இவர் மீது சந்தேகம் ஏற்படவில்லை.

இந்நிலையில்தான் மயிலாடுதுறையில் மூன்று இடங்களில் கொள்ளை அடித்துவிட்டு நான்காவதாகக் கொள்ளையில் ஈடுபட்ட போது லட்சுமணன் போலிஸாரிடம் சிக்கியுள்ளார். இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இவர் மீது உள்ள வழுக்களை போலிஸார் சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Also Read: “600 கிலோ திருக்கை மீன்.. காரைக்கால் மீனவர்களுக்கு அடித்த ஜாக்பாட்” : நடுக்கடலில் நடந்தது சுவாரஸ்யம்!