Tamilnadu

“நீங்கள் போராட வேண்டியது ஒன்றிய அரசுக்கு எதிராக.. முதல்ல அதை செய்யுங்க” : அண்ணாமலைக்கு அமைச்சர் அட்வைஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட லாக்கரை தமிழக தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சற்குரு கண்ணன், துணைத்தலைவர் சிவகுமார், செயலாளர் பீட்டர் கென்னடி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதன் பின்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கொரோனா தோற்று தடுப்பு நடவடிக்கையாக ஒன்றிய அரசு வகுத்த விதி முறைகளை தமிழகத்தில் அமலாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

இந்த விதிமுறைகளுக்கு மாறாக ஆலய நுழைவு போராட்டம் என்ற பெயரில் பா.ஜ.கவினர் பொது மக்களிடையே பிரிவினையை தூண்டுகின்றனர். மேலும், அவர்களது போராட்டத்தை ஒன்றிய அரசுக்கு எதிராக நடத்தியிருக்க வேண்டும். இப்போராட்டம் அரசியல் சித்து விளையாட்டு. அதுமட்டுமல்லாது, முந்தைய காலங்களில் எதற்காக ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெற்றதோ அதே கோரிக்கைக்காக இப்போது நடத்தி இருந்தால் நாங்கள் பாராட்டி இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “பேருந்தில் புகை பிடித்தைக் கண்டித்த அரசு ஓட்டுநர் மீது தாக்குதல்” : அடாவடியில் ஈடுபட்ட இளைஞர் கைது!