Tamilnadu

மகள் திருமணத்தால் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு - திருவள்ளூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் மாவட்டம், மாம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவரது மனைவி சரளா. இந்த தம்பதிக்கு அர்ச்சனா என்ற மகள் உள்ளார். இவர் இரட்டை ஏரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவராக உள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த 27ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

இதையறிந்த அர்ச்சனாவின் பெற்றோர் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று தாமரைச்செல்வன் தனது வயலுக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரது மனைவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதனால் மிகுந்த மனவேதனையடைந்த தாமரைச்செல்வன், பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சிறுமியை கொன்றுவிட்டு எதுவும் தெரியாதது போல் நாடகமாடிய இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!