Tamilnadu

“ரூ.10 லட்சம் கொடு.. இல்ல திருமணத்தை நிறுத்திவிடுவேன்” : பெண்ணை போனில் மிரட்டியவருக்கு நேர்ந்த கதி!

சென்னை அடுத்த மண்ணடியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்குத் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் ரூ.10 லட்சம் கொடுக்காவிட்டால், நடத்தை சரியில்லை என மாப்பிள்ளை வீட்டில் சொல்லி திருமணத்தைத் தடுத்து நிறுத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பிறகு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து இளம் பெண்ணுக்கு வந்த தொலை பேசி எண் குறித்து விசாரணை நடத்தினர்.

அருகில் உள்ள தொலைபேசி பூத்தில் இருந்து பேசியது தெரியவந்தது. அங்கு சென்ற போலிஸார் தொலைபேசி பூத்தில் இருந்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். பின்னர் பாரிமுனை, பிடாரியார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசாமி என்பவர்தான் மிரட்டல் விடுத்த நபர் என தெரியவந்தது.

இதையடுத்து போலிஸார் பாலசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இப்படிச் செய்ததாக பாலசாமி போலிஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Also Read: போலி வருமான வரித்துறை அதிகாரியாக உலாவந்த முன்னாள் போலிஸ்.. உண்மை வெளிவந்ததால் தற்கொலை - நடந்தது என்ன?