Tamilnadu

பணத்தை வாங்கி ஏமாற்றிய வாலிபர்? சமாதானம் பேச வரச்சொல்லி வெளுத்தெடுத்த பெண்கள் - நடந்தது என்ன?

திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் தங்கி தனியார் ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மேட்ரிமோனி இணையதளம் மூலம் கோகுல கிருஷ்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் திருமணப் பேச்சுவரை சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இளம்பெண்ணும், கோகுல கிருஷ்ணனும் வாட்ஸ் ஆப் வீடியோ காலில் நெருங்கி பழகியதாகவும், இளம்பெண்ணிடம் இருந்து கோகுலகிருஷ்ணன் ரூ. 1.25 லட்சம் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இளம் பெண்ணுக்கு வேறொரு நபருடன் தொடர்பிருப்பதாகத் தெரியவர கோகுல கிருஷ்ணன் இளம் பெண்ணிடமிருந்து விலகத் துவங்கியுள்ளார். இதனையடுத்து அந்த இளம் பெண் கோகுல கிருஷ்ணனை ஜாபர்கான் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் வைத்து இதுபற்றி பேச வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு வந்த கோகுல கிருஷ்ணனிம் பேசியபோது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் கோகுல கிருஷ்ணன் அந்த பெண்ணின் ஆடையை கிழித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண்ணும், அவரின் உறவினர்களும், நண்பர்களும் கோகுல கிருஷ்ணனை சரமாரியாக தாக்கி வீடியோ பதிவு செய்தனர். பிறகு கிண்டி காவல் நிலையத்தில் கோகுல கிருஷ்ணனை ஒப்படைத்தனர்.

சம்பவம் நடந்த இடம் ஜாபர்கான் பேட்டை என்பதால் இது குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குள் வரும் எனக்கூறி இளம் பெண்ணை குமரன் நகர் காவல் நிலையத்துக்கு போலிஸார் அனுப்பி வைத்தனர். மேலும், ரத்தக் காயம் ஏற்பட்ட கோகுல கிருஷ்ணனை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலிஸார் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கோகுல கிருஷ்ணன் இளம்பெண் தன்னை பொய் கூறி வரவழைத்து நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியதாக குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக இளம்பெண் உள்பட 3 பேரை கைது செய்து குமரன் நகர் போலிஸார் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில் கோகுல கிருஷ்ணன் தன்னிடம் திருமண ஆசைக்காட்டி 1.25 லட்சம் ரூபாய் பணம் வாங்கி ஏமாற்றியதாக அந்த இளம்பெண் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கோகுல கிருஷ்ணனை இளம் பெண்ணும் அவரின் உறவினர்களும் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ரூ.10 லட்சம் கொடு.. இல்ல திருமணத்தை நிறுத்திவிடுவேன்” : பெண்ணை போனில் மிரட்டியவருக்கு நேர்ந்த கதி!