Tamilnadu

“சொந்தக் கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்” : ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த கே.டி.ராஜேந்திர பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார். கடந்த மாதம் 24ம் தேதி அன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்பது தொடர்பாக சாத்தூரில் அ.தி.மு.கவினர் இரு கோஷ்டிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இம்மோதலில் அ.தி.மு.க மாவட்டச் செயலாளரும் முன்னாள் பால்வளத் துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ராமகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் வீராவேரெட்டி புகார் அளித்ததன் அடிப்படையில், முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் உட்பட 5 பேர் மீது சாத்தூர் போலிஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கில் தன்னை போலிஸார் கைது செய்யக்கூடாது என்பதற்காக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் அடிப்படையில் நேற்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது கொலைமிரட்டல் மட்டுமில்லாமல், ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசு வழக்கறிஞர் திருமலையப்பன் எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து முன்னாள் அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் அமைச்சருக்கான முன்ஜாமின் மனுவை வலியுறுத்துவதில்லை என்று தெரிவித்து அதனை வாபஸ் பெற்றனர். இதனையடுத்து வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) தனசேகரன் அமைச்சரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

Also Read: “நீட் எதிர்ப்பு போராட்டத்தின் அடுத்த கட்டம்..” : மோடி அரசை ஆட்டம் காண வைக்கும் முதலமைச்சரின் கடிதம்!