Tamilnadu

அரிவாளை காட்டி மிரட்டி மாத்திரைகளை அள்ளிச்சென்ற இளைஞர்கள் கைது... விசாரணையில் ‘பகீர்’ தகவல்!

பட்டுக்கோட்டையில் மெடிக்கல் ஷாப்பில் அரிவாளைக் காட்டி மிரட்டி தூக்க மாத்திரைகளை அள்ளிச் சென்ற இளைஞர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை மைனர் பங்களா அருகே உள்ள தனியார் மருத்துவமனையின் மெடிக்கல் ஷாப்பிற்கு இரவில் சென்ற பண்ணவயல் ஹரிகரன், பட்டுக்கோட்டை ராஜேஷ் ஆகிய இருவரும், ஒரு மாத்திரையின் பெயரைச் சொல்லி கேட்டுள்ளனர்.

மெடிக்கல் ஷாப்பில் இருந்த பெண் ஊழியர் அவர்கள் கேட்ட மாத்திரையில் குறைந்த அளவே கொடுக்க, அதிகமாக வேண்டும் எனக் கேட்டுள்ளனர். அதற்கு அந்தப் பெண், மாத்திரை சீட்டு இல்லாமல் தரமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்துக் காட்டி, மெடிக்கல் ஷாப்பிற்குள் நுழைந்து, மாத்திரைகளை அட்டைப் பெட்டியோடு அள்ளிக்கொண்டு கிளம்பியுள்ளனர்.

அப்பெண்ணின் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த பலரும் ஓடி வந்தனர். இளைஞர் ஒருவர் மாத்திரையை எடுத்துக்கொண்டு ஓடிய இளைஞரைப் பிடிக்க முயன்றபோது, அரிவாளை ஓங்கி மிரட்டிவிட்டு இருவரும் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, இந்தச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகி பாலகிருஷ்ணன், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய டி.எஸ்.பி. செங்கமலகண்ணன் தலைமையிலான போலிஸார் விரைந்து செயல்பட்டு மாத்திரைகளை அள்ளிச்சென்ற 2 இளைஞர்களையும் பிடித்துள்ளனர்.

ஆற்றில் பதுங்கியிருந்த இருவரையும் போலிஸார் பிடிக்க முயன்றபோது பாலத்திலிருந்து குதித்து தப்பிக்க முயற்சித்ததால் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாத்திரையை அவர்கள் போதைக்காக உபயோகப்படுத்தியது தெரியவந்துள்ளது.

இதேபோல, புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் மாத்திரையை போதை மாத்திரையாக விற்பனை செய்த ஹக்கீம், தனசேகர், சக்திவேல் ஆகிய 3 இளைஞர்களையும் போலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்து மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Also Read: “சொந்தக் கட்சிக்காரருக்கே கொலை மிரட்டல்” : ராஜேந்திர பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!