Tamilnadu

இளநீர் கடையில் இளநீர் திருடி தனியாக கடை நடத்திய திருடன்; கையும் களவுமாக சிக்கிய பலே கில்லாடி!

சென்னை கே.கே.நகர் 80 அடி சாலையில் நடைபாதை ஓரமாக பல இளநீர் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் லிங்கம் என்பவருக்குச் சொந்தமான இளநீர் கடையும் உள்ளது. இவர் சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் கடந்த 30ஆம் தேதி லாரி மூலம் கொண்டு வரும் இளநீர் காய்களை வாங்கி தன் கடையின் அருகில் சுவற்றின் ஓரமாக தார்ப்பாய் மூலம் மூடி வைத்து சென்றதாகத் தெரிவித்துள்ளார். வழக்கம் போல் கடையை திறக்கும் போது இளநீர் காய்கள் எண்ணிக்கை குறைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது 50க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை ஒருவர் மூன்று சக்கர வாகனத்தில் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலிஸாரிடம் லிங்கம் புகாரும் அளித்துள்ளார். 1500 ரூபாய் மதிப்புள்ள 50 காய்கள் காணாமல் போனது தொடர்பாக கே.கே.நகர் போலிஸர் வழக்குப்பதிவு செய்தனர். போலிஸார் விசாரணையில் இதேபோன்று அப்பகுதியில் உள்ள இளநீர் கடைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இளநீர் காய்கள் மாயமானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அதே திருடன் மற்றொரு நாள் நள்ளிரவில் மீண்டும் லிங்கத்தின் இளநீர் கடைக்கு திருட வந்த போது பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்துள்ளனர். விசாரணை செய்தபோது அதே பகுதிகளில் இளநீர் கடை வைத்து நஷ்டமான ரஜினிகாந்த் என்பவர்தான் திருடியது தெரியவந்துள்ளது. இது போன்று பல கடைகளில் 500க்கும் மேற்பட்ட இளநீர் காய்களை திருடி, கோயம்பேட்டில் தனியாக கடை நடத்தி வந்த ரஜினிகாந்தை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read: குளிர்பானம் என நினைத்து மது குடித்த குழந்தை பலி.. அதிர்ச்சியில் தாத்தா உயிரிழப்பு: வேலூரில் நடந்தது என்ன?