Tamilnadu
“நிர்வாணமா திருடுறது ஏன் தெரியுமா?” - கோவை போலிஸாரை அதிரவைத்த ஷோரூம் கொள்ளையனின் வாக்குமூலம்!
கோவையில் வாகன ஷோரும்களில் நிர்வாண கோலத்தில் திருடிய கொள்ளையனை போலிஸார் கைது செய்தனர். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களில் வாகன ஷோரும்களில் அடுத்தடுத்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தன.
குறிப்பாக, சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனை மையத்தில் மூன்று லட்ச ரூபாய் பணம் திருடுபோனதாகவும் போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
வாகன ஷோரும்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் நிர்வாண கோலத்தில் வந்து ஒருவர் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்ததைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், நிர்வாணமாகச் சென்று ஷோரூம்களில் திருட்டில் ஈடுபட்டபவர் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் தெருவை சேர்ந்த கோச்சடை பாண்டியன் என்பது தெரியவந்தது. பழனி பகுதியில் பதுங்கியிருந்த அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோச்சடை பாண்டியனிடம் போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
கோவை மட்டுமின்றி சென்னை, மதுரை, திருப்புர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஷோரூம்களில் திருட்டில் ஈடுபட்டதாகவும், ஷோரூம்களில்தான் ரொக்கப்பணத்தை மொத்தமாக வைத்திருப்பார்கள் என்பதால் அவற்றை குறிவைத்து திருடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
கோவையில் ஒரு ஹோட்டலில் வேலைபார்த்து வந்த நிலையில் கொரோனா காரணமாக வேலையிழந்ததால் திருட்டில் ஈடுபட்டதாகவும், கொள்ளையடித்த பணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினர்களின் சிகிச்சைக்கு பணம் தந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே செல்வதால், கம்பியில் துணி சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, ஆடையைக் கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாகவே நுழைவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பாண்டியன் பழனியில் தங்கியிருந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சத்தை போலிஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மேகதாது அணை.. கர்நாடக செல்லும் முதல்வர் விஜய்.. வீடியோ போடலாம், விடியலைத் தராது: எச்சரிக்கும் முரசொலி!
-
“முதலில் மின்வெட்டுப் பிரச்சினை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சினை!”: கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!