Tamilnadu

“மாமாவுக்கு யார் திதி கொடுப்பது?”: தகராறில் அத்தையை வெட்டிக்கொன்ற இளைஞர்- தூத்துக்குடியில் பகீர் சம்பவம்!

தூத்துக்குடி அருகே திதி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அத்தையை குத்திக்கொலை செய்த இளைஞரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உடன்குடி பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு அருணா (42) என்ற மனைவி, கமலேஷ் (18), அகிலேஷ் வர்ஷன் (8) என்ற இரு மகன்கள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார்.

இதனைத்தொடர்ந்து செல்வமுருகனின் மனைவி அருணா தனது பிள்ளைகளுடன் உடன்குடியில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் கழிவறையில் அருணா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலிஸார் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

செல்வமுருகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்க வேண்டும் என அவரது அக்கா மகன் முத்துக்குமார், அருணாவிடம் பேசியுள்ளார்.

அதற்கு அருணா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாகவே தன் மகன்களை வைத்து திதி கொடுத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், தனது அத்தை அருணாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அருணா பரிதாபமாக உயிரிழந்தார்.

திதி கொடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஆடுகளைக் காப்பாற்ற முயன்ற 3 சிறுவர்கள் மழைநீரில் மூழ்கி பலி.. கரூர் அருகே சோகம்!