Tamilnadu
”அரசு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்தால் இனி இதுதான் கதி” - தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை!
செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கவும் அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறப்போர் இயக்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி துறை, பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவற்றின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், நீர் ஆதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும்,புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் தடுக்கவும் உரிய நடவடிகை எடுக்கப்பட்டு வருவதாகவும், தலைமை செயலாளர் முன்னிலையில் கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற கூட்டத்தில் மிகவும் ஆட்சேபகாரமான அல்லது வெள்ளம் வந்தால் பாதிப்பை ஏற்படுத்த கூடிய ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அரசு புறம்போக்கு மற்றும் நீர் நிலைகளை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்போ, மின் இணைப்போ வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையிலும், ஆக்கிரமிப்பு குறித்து அரசிடம் தெரியப்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு கிராம அளவில் இளைஞர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பை சேர்ந்தோரை கொண்டு குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, கூவம் ஆறு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்வாய்களை ஆக்கிரமித்து வசித்து வந்த 18,363 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சென்னை தவிர பிற நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் உள்ள 585 நீர் நிலைகளில் 9802 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு அவற்றில் இதுவரை 5178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பராமரிக்கும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்நிலைகள் உள்ள பகுதிகளின் சர்வே எண்களை பதிவுத்துறைக்கு தெரிவிக்கவும், அத்தகைய இடங்களை அரசு இடங்களாக கணக்கில் கொண்டு அவற்றின் மதிப்பை "ஜீரோ - 0" என நிர்ணக்க உள்ளதாகவும், அத்தகைய இடங்களை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் ஒத்திவைத்துள்ளனர்.
Also Read
-
'ஜனநாயகன்' தயாரிப்பாளருக்கு பதவி... மேகதாது விவகாரத்தில் குரல் கொடுப்பாரா? - திருச்சி சிவா கேள்வி!
-
வைரலாகும் வீடியோ... அமைச்சர் சரத்குமார் மீது போதைப் பொருள் பயன்படுத்தியதாக சந்தேகம்?
-
FIFA உலகக் கோப்பை: தோற்றாலும் போராடுவோம்; அமெரிக்காவை வீழ்த்தி பெருமையுடன் விடைபெற்ற துருக்கி!
-
“மாரத்தான் ஓடுபவர்கள் புலம்பித் தவிக்கின்றனர்... இது கேவலமான செயல்!” : திமுக ஐ.டி விங் கடும் விமர்சனம்!
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!