Tamilnadu

"தூங்க வேற இடமே கிடைக்கலையா..?” : நடுவழியில் திடீரென நின்ற பயணிகள் ரயில் - நடந்தது என்ன?

கோவை - மேட்டுப்பாளையம் இடையே பயணிகள் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை கோவை ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயில் ஒன்று மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரெ ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதற்கான காரணம் புரியாமல் பதற்றத்துடன் ரயிலை விட்டு கீழே இறங்கிப் பார்த்தனர்.

அப்போது ரயிலுக்கு அடியில் தண்டவாளத்தில் ஒருவர் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மெதுவாக வெளியே வரவழைத்து மீட்டனர்.

அப்போதுதான் அந்த நபர் குடிபோதையில் ரயில் வருவது கூட தெரியாமல் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கியது தெரியவந்தது. மேலும் ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தின் நடுவே ஒருவர் படுத்திருப்பதை அறிந்து உடனே ரயிலை நிறுத்த முயற்சித்துள்ளார்.

இருந்தபோதும் ரயிலின் சில பெட்டிகள் போதை ஆசாமியைக் கடந்து சென்று நின்றது. ஆனால் அவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. இதையடுத்து ரயில்வே அதிகாரிகளும், பொதுமக்களும் அந்த நபரை எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்தனர்.

Also Read: மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் திடீர் திருப்பம்... வேறொரு பெண்ணுடன் மாயமான கணவன்!