Tamilnadu

காதலி மரணம்... மன உளைச்சலில் கருவேலமரத்தில் தூக்கிட்டு காதலன் தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

காதலி தற்கொலை செய்துகொண்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் வினித் குமார் (25). இவர் அதே பகுதியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுபஸ்ரீ மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சுபஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தனது மகளின் தற்கொலைக்கு வினித் குமார்தான் காரணம் எனக் கூறி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் சுபஸ்ரீயின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலிஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வினித் குமார் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்று கருவேலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில் காதலி இறந்த துக்கத்தில் இருந்து வந்த வினித்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்துள்ளது.

இருவரின் மரணம் தொடர்பாக கீழ்வேளூர் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த மன உளைச்சல் காரணமாக வினித் குமாரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அ.தி.மு.க ஒன்றியக்குழு தலைவர் தொட்டதெல்லாம் ஊழல்” : சொந்தக் கட்சி உறுப்பினர்கள் புகாரால் பரபரப்பு!