Tamilnadu

ஒரு போட்டோவை வைத்து ஊரையே ஏமாற்றிய IAS அகாடமி உரிமையாளர்கள் - சிக்கப்போகும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள்?

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் சிலம்பரசன். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடன் வேலைபார்க்கும் ஆசிரியர்கள் மூலம் அவரது சகோதரர் ஜான்சன் என்பவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

ஜான்சன் சென்னை குரோம்பேட்டையில் நிமிர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பின் ஜான்சன் அண்ணாநகரில் அக்னி ஐஏஎஸ் அகாடமி நடத்தும் சிவக்குமார் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். சிவகுமாருக்கு அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் அதிகம் பேர் தெரியும் என கூறியுள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமான நண்பர் எனக் கூறி அவருடன் எடுத்துக்கொண்ட போட்டோவையும் காட்டியுள்ளார்.

அரசாங்கத்தில் அதிக தொடர்புகள் இருப்பதால் சிவக்குமார் எளிதில் அரசு வேலை வாங்கித் தருவார் என ஆசை வார்த்தை காட்டி அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது மூன்று லட்ச ரூபாய் பணத்தை உடனடியாக கொடுத்தால் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக சிலம்பரசன் இடம் சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனை நம்பி கடந்த 2019ஆம் ஆண்டு சிலம்பரசன் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பின் 3 மாதம் கழித்து உதவி கல்வி அதிகாரி பணி இருப்பதாகவும் கூடுதலாக ஏழு லட்ச ரூபாய் கொடுத்தால் உடனடியாக வாங்கித் தருவதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி கூடுதல் பணத்தை அளித்த சிலம்பரசனுக்கு உதவி கல்வி அதிகாரி பணி கிடைத்தது போன்று போலி நியமன ஆணை ஒன்றை சிவக்குமார் கொடுத்துள்ளார். அதன்பின் நீண்ட நாட்களாகியும் பணியில் சேர முடியாததால் சிவக்குமார் மற்றும் ஜான்சனிடம், சிலம்பரசன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். தொடர்ந்து பணத்தை திருப்பித் தருவதாக கூறி ஏமாற்றி வந்ததால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சிலம்பரசன் புகார் அளித்துள்ளார். இவர்கள் இருவர் மட்டும் அல்லாது மனோஜ் மற்றும் ரஞ்சித் என்ற இரண்டு தரகர்கள் பல பேரிடம் இது போன்று பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்துள்ளதாகவும் சிலம்பரசன் புகாரில் தெரிவித்துள்ளார்.

Also Read: ராணுவ வீரரின் பண்ணை வீட்டை அபகரித்து கொலை மிரட்டல் : நாகை அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேருக்கு வலைவீச்சு!

இதனை அடிப்படையாக கொண்டு தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் அக்னி அகடமி உரிமையாளர் சிவக்குமார், நிமிர் ஐஏஎஸ் அகாடமி உரிமையாளர் ஜான்சன், மனோஜ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இவர்கள் இதுபோன்று எத்தனை பேரை ஏமாற்றி உள்ளார்கள் இவர்களுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தெல்லாம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட நால்வரையும் விரைவில் கைது செய்ய உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Also Read: “தேர்தல் அதிகாரியை கன்னத்தில் அறைந்த அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்” : தோல்வி பயத்தில் அ.தி.மு.க அராஜகம்!