Tamilnadu

குண்டுகளை வீசி கார் கண்ணாடி உடைத்து திருட்டு;பெங்களூருவில் சென்னை போலிஸிடம் பலே கும்பல் சிக்கியது எப்படி?

சென்னை அண்ணா நகர் பகுதியில் கடந்த 16 ஆம் தேதி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட 3 கார்களின் கண்ணாடிகளை உடைத்து லாப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் அண்ணா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து புலன் விசாரணை மேற்கொண்டனர். மேலும், சம்பவம் நடந்த இடங்களிலுள்ள சி.சி.டி.வி காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகள் எங்கெங்கு பயணித்துள்ளனர் என்பதை தீவிர விசாரணைக்குப்பின் கண்டறிந்து அவர்கள் பெங்களூரில் பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர்.

அதனடிப்படையில் பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் தனியார் விடுதியில் அறையெடுத்துத் தங்கியிருந்த திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த சுப்பிரமணி (48), ரோகன் (24), டினு ஆனந்த் (25), தினேஷ் குமார் (25), தீனதயாளன் (22), கிரண் குமார் (23), ராஜாராம் (29) மற்றும் 17 வயது கல்லூரி மாணவன் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

சிறய வகை இரும்பு குண்டுகளை ரப்பர் பேண்டில் வைத்து அடித்து கார் கண்ணாடிகளை உடைத்து திருடுவதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 8 லாப்டாப்கள் மற்றும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 8 பேரையும் இன்று மாலை சென்னை அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “குழந்தையை கொன்ற அமிராமியின் தம்பி தற்கொலை” : அமிராமியின் தகாத உறவால் சின்னாபின்னமான குடும்பம்!