Tamilnadu

தந்தையை பீர் பாட்டிலால் குத்திக் கொன்று தண்டவாளத்தில் வீசிய மகன் : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் செட்டியபட்டி ரயில்வே கேட் அருகே ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலிஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இறந்தவர் வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது. இவரது மகன் கிஷோரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கிஷோர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதைக் கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், தங்கராஜ், ரீத்தா என்பவரை சிறு வயது முதல் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இருந்தபோதும் ரீத்தாவை மறக்க முடியாததால் அவரை கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் கிஷோர்.

இந்நிலையில், தங்கராஜ் வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு சீட்டாடி பணத்தைச் செலவழித்து வந்துள்ளார். இதனால் இவருக்கும் மகன் கிஷோருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் கிஷோர் சம்பாதித்த பணத்தையும் எடுத்துச் செலவழித்து வந்துள்ளார்.

இதனால் தந்தை தங்கராஜைக் கொலை செய்யத் திட்டம் போட்டுள்ளார் கிஷோர். இதன்படி நண்பர்களுடன் சேர்ந்து சம்பவத்தன்று ரயில்வே கேட்டில் நிற்பதாகவும், இரு சக்கர வாகனம் எடுத்து வரும்படியும் தந்தையிடம் செல்போனில் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கு வந்த தங்கராஜை மறைந்திருந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டை, பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்து விட்டு தண்டவாளத்தில் உடலை வீசிவிட்டுச் சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலிஸார் கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் ஆறுமுக பாண்டி, பிராங்கிளின் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தகாத உறவால் நேர்ந்த கொடூரம்... சிறுமியை அடித்து ஆற்றில் வீசி கொலை: தஞ்சையில் பயங்கரம்!