Tamilnadu

வரி வசூலில் பல கோடி முறைகேடு.. தஞ்சாவூர் மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் தகிடுதத்தம் - RTI மூலம் அம்பலம்!

தஞ்சாவூர் மாநகராட்சியில் 2016ஆம் ஆண்டு முதல் வரி வசூலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், கடந்த ஐந்தாண்டுகளில் வெறும் 50% மட்டுமே வரி வசூல் செய்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூர் கரந்தை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கமலக்கண்ணன், தஞ்சாவூர் மாநகராட்சியில் ஆண்டுதோறும் எவ்வளவு வரி வசூல் செய்யப்படுகிறது. எவ்வளவு தொகை இதுவரை நிலுவையில் உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதலளித்த தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம், சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, வாடகை உள்ளிட்டை மூலம் 2017 - 2018 ஆண்டிற்கான வரி 20.40 கோடி. முந்தைய ஆண்டின் நிலுவைத்தொகை 28.11 கோடி சேர்த்து 48.42 கோடி ரூபாய். ஆனால் அந்த ஆண்டு 16.23 கோடி ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் 2018 - 2019 ஆண்டிற்கான வரி வசூலில் 27.77 கோடியும், முந்தைய ஆண்டிற்கான நிலுவை தொகை 33.02 கோடியும் சேர்த்து 60.79 கோடி ரூபாய். ஆனால் அந்தாண்டு 16.24 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் 2019 - 2020 ஆண்டிற்கான வரி 22.05 கோடி. நிலுவைத் தொகை 44.55 கோடியும் மொத்தம் 66.5 கோடி வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் 19.54 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கமலக்கண்ணன் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் அதற்குரிய வரியும், நிலுவைத் தொகையும் முழுமையாக வசூல் செய்யவில்லை. மேலும் நிலுவைத்தொகை உள்ளபோது முதலில் அதை வரவு செய்ய வேண்டும். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் அதனைச் செய்யவில்லை, எனவே இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் சுமார் 135 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் வெறும் 68 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளனர். இதனால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: நகையே இல்லாமல் வெறும் பையை வைத்து ரூ.2 கோடிக்கு கடன்... அ.தி.மு.க ஆட்சியில் மாபெரும் மோசடி!