Tamilnadu

ஃபேக் ஐடி அமுதா... 2 வருடங்களாக ஏமாற்றிய நபரை விஷம் வைத்துக் கொன்ற இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்கள்!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேலக்கரந்தையில் காட்டுப்பகுதியில் கடந்த 15-ஆம் தேதி மேலஈராலைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (28) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

முருகன் சடலம் அருகே மது பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகியவை கிடந்த நிலையில், முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தினர்.

எட்டயபுரம் பேருந்து நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், முருகனுடன் ஒரு நபர் சென்றது தெரியவந்தது. மேலும், உயிரிழந்த முருகனின் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தபோது, ஒரே எண்ணில் இருந்து முருகனுக்கு அடிக்கடி போன் வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்த செல்போன் எண்ணை போலிஸார் ஆய்வு செய்தபோது அது காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் (24) என்பவருடையது எனத் தெரியவந்தது.

கொலைச் சம்பவம் நடந்த இடத்திற்கு காஞ்சிபுரத்தில் இருந்து முருகன், சம்பவத்தின் போது தவறவிட்டுச் சென்ற மணிபர்ஸை எடுக்க வந்தபோது தனிப்படை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், தான் முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், கொலைக்கான அதிர்ச்சி காரணத்தையும் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட முருகன், 2 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா என்ற பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு வைத்திருந்துள்ளார். காஞ்சிபுரம் முருகனும், அந்த அமுதா என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் கணக்கிற்கு குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியுள்ளார்.

பின்னர் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டுள்ளனர். எதிர்முனையில் பெண் குரல் கேட்கவே, தொடர்ந்து தினமும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார் காஞ்சிபுரம் முருகன்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 14-ம்தேதி காதலர் தினத்தன்று அமுதாவை சந்திக்க எட்டயபுரம் வந்துள்ளார் காஞ்சிபுரம் முருகன். அப்போதுதான் தன்னுடன் பழகியது பெண் இல்லை என்ற விவரம் அவருக்குத் தெரியவந்துள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரை சமாதானப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடச்செய்துள்ளார் மேலஈரால் முருகன். அதை காஞ்சிபுரம் முருகனுக்கு தெரியாமல வீடியோவும் எடுத்துள்ளார்.

இந்த வீடியோவை வைத்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மேலஈரால் முருகன் அவரிடமிருக்கும் வீடியோவை அழிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக எட்டயபுரம் வந்து மதுவில் விஷத்தை கலந்து காஞ்சிபுரம் முருகனுக்கு கொடுத்துள்ளார். அதைக் குடித்த மேலஈரால் முருகனுக்கு லேசான மயக்கம் ஏற்படவே, அருகில் கிடந்த கல்லை எடுத்து முருகனின் தலையில் போட்டுவிட்டுத் தப்பித்துள்ளார்.

பெண் போல ஏமாற்றி, தன்னை மிரட்டியவரை இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: போர்வெல் குழிக்குள் குழந்தை.. திக்திக் நிமிடங்கள்.. 24 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த சோகம்!