Tamilnadu

அமைச்சரின் மருமகன் எனக்கூறி ரூ.1.25 கோடி மோசடி.. திருப்பி கேட்டவரை நிர்வாணமாக்கி மிரட்டல் - நடந்தது என்ன?

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தொலைதூர கல்வி நிலையம் நடத்தி வருகிறார். இவருக்கு கார்த்திக் பிரசன்னா என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது அவர், அசாம் மாநில அமைச்சரின் மருமகன் என கூறி அவருடன் எடுத்த புகைப்படங்களைக் காண்பித்து முத்துக்குமரனை நம்ப வைத்துள்ளார்.

மேலும் ரயில்வே துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் ஒருவருக்கு 3.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாகவும், கமிஷன் தொகையாக ஒருவருக்கு 25 ஆயிரமும், ஏஜென்ட் வேலை வாங்கி தருவதாகவும் முத்துக்குமரனிடம், கார்த்திக் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதை நம்பி கடந்த 2018ஆம் ஆண்டு சிலரிடம் வேலை வாங்கி தருவதாகக் கூறி பெற்ற ரூபாய் 1.25 கோடியை கார்த்திக் பிரசன்னாவின் மனைவி ஜூரி ராணி தேவியின் வங்கிக் கணக்கிற்கு முத்துக்குமரன் செலுத்தியுள்ளார். ஆனால் நீண்ட காலமாக அவர் சொன்னபடி ஒருவருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. மேலும் கூறியபடி கமிஷன் தொகையும் கொடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த முத்துக்குமரன் ரயில்வேயில் கார்த்திக் பிரசன்னா குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.

அப்போதுதான், கார்த்திக் பிரசன்னா அசாம் அமைச்சரின் மருமகன் என்றும், ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி பல பேரிடம் பண மோசடி செய்துள்ளார் என்பது முத்துக்குமரனுக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கார்த்திக் பிரசன்னாவிடம் அவர் கேட்டுள்ளார். மேலும் கொடுத்த பணத்தையும் திருப்பிக் கேட்டுள்ளார்.

இதையடுத்து பணத்தைக் கொடுப்பதாகக் கூறி முத்துக்குமரனை எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கம் அருகே வருமாறு கூறியுள்ளார். அங்கு சென்றபோது போலிஸ் எனக் கூறி முத்துக்குமரனை காரில் கடத்திச் சென்று, அவரை நிர்வாணமாக்கி, வீடியோ எடுத்து மேலும் 80 ஆயிரம் பணத்தைப் பறித்துள்ளனர்.

பின்னர் மதுரை ரவுடி கணபதி, கார்த்திக் பிரசன்னா, மற்றும் ஐபி.எஸ் அதிகாரி ஒருவருக்குப் பாதுகாப்பு காவலராக இருக்கும் அருண்குமார் ஆகியோர் இணைந்து மீண்டும் முத்துக்குமரனிடம் ரூ. 15 லட்சம் கேட்டு மிரட்டியுன்னர்.

இதனால் முத்துக்குமரன் இதுகுறித்து போலிஸில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து ரவுடி கணபதியைக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக் பிரசன்னா, அருண்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Also Read: ஃபேக் ஐடி அமுதா... 2 வருடங்களாக ஏமாற்றிய நபரை விஷம் வைத்துக் கொன்ற இளைஞர் - விசாரணையில் ‘பகீர்’ தகவல்கள்!