Tamilnadu

“35 இடங்கள்.. 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம் - பணம் பறிமுதல்” : KC.வீரமணி வீட்டில் கிடைத்தது என்னென்ன?

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வருகின்றன மேலும் அவருக்கு சொந்தமான ஏலகிரி மலையில் உள்ள பங்களா மற்றும் அவருடைய மனைவிக்கு சொந்தமான இடங்கள் அதனைத்தொடர்ந்து திருப்பத்தூர் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ், ஜோலார்பேட்டை சட்டமன்ற ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் நாட்றம்பள்ளி, முன்னாள் கவுன்சிலர் மலகொண்ட ராஜா மற்றும் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் நடத்திய சோதனையில், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.34 லட்சம் ரொக்கம், அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வெளியான பத்திரிக்கை செய்தியில், “தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 15.09.2021 ஆம் தேதியன்று வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மேற்படி வழக்கு தொடர்பாக கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் உட்பட பெங்களூரில் இரண்டு இடங்களிலும், சென்னையில் ஆறு இடங்களிலும், ஆக மொத்தம் 35 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் இன்று (16.09.202) சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் பணம் ரூ.34,01,060/-, ரூ.1,80,000/- மதிப்பிலான அன்னிய செலாவாணி டாலர், 9 சொகுசு கார்கள் (ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் உட்பட), 5 கம்ப்யூட்டர் ஹார்டு - டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

மேலும், இவ்வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் (தோராயமாக ரூ.30 லட்சம் மதிப்பிலான) குவித்து வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 1 ரூபாய்க்கு 99 ஆண்டுக்கு லீஸ்... 4300 சதுர அடி நிலத்தை ‘ஆட்டையப்போட்ட’ முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி!