Tamilnadu
“பா.ம.கவை தொடர்ந்து தே.மு.தி.கவும் தனித்துப் போட்டி” : அ.தி.மு.க கூட்டணிக்குள் அடுத்தடுத்து குழப்பங்கள்!
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணி உடைந்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு உரசல்கள் தொடர்ந்துவந்த நிலையில், பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகி தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க தனித்து போட்டியிடுவதாக அறிவிவித்துள்ளது. மேலும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அ.தி.மு.கவை கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சிக் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய ராமதாஸ், “அ.தி.மு.க கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவில்லை. கடந்த தேர்தல்களில் அ.தி.மு.கவில் சீட் கிடைக்காதவர்கள் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் எதிர்த்து போட்டியிட்டனர். இதுகுறித்து அப்போதைய முதல்வர் பழனிச்சாமியிடம் முறையிட்ட போதும் அவரால் சொந்த கட்சியினரை கட்டுப்படுத்த முடியவில்லை.
சொந்தக் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்த முடியாத பழனிச்சாமியுடன் கூட்டணி வைத்தால் நம்மால் ஜெயிக்கமுடியுமா? அ.தி.மு.கவுடன் தற்போது கூட்டணி வைத்தாலும் நமக்கு உரிய மரியாதை கிடைக்காது.” எனப் பேசியுள்ளார்.
இந்நிலையில், தே.மு.தி.கவும், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் அ.தி.மு.க கூட்டணியில் பெரும் பிளவு உறுதியாகியுள்ளது.
தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் விருப்ப மனுக்களை 16, 17 இரண்டு நாட்கள் காலை 10 மணியில் இருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவைப் பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து கட்சிகள் வெளியேறி வரும் நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் கூட்டணியிலிருந்த கட்சிகளை தாக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “தனித்துப் போட்டியிடுவதால் பா.ம.கவுக்குதான் இழப்பு. எங்கள் கட்சியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்களும் விமர்சிக்க வேண்டிய நிலை ஏற்படும்.” எனக் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போலத்தான். தேவையெனில் போட்டுக் கொள்வோம் இல்லையெனில் கழற்றி வைத்து விடுவோம்” எனப் பேசியுள்ளார்.
Also Read
-
2 ஆண்டுகளுக்குப் பிறகு காசாவில் நின்ற வெடி சத்தம்... “உலக நாடுகள் இஸ்ரேலை பேச விடக்கூடாது...” - முரசொலி!
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!