Tamilnadu

“இனிமே எங்கேயும் இப்படி நடக்கக்கூடாது”: நீட் தேர்வால் பலியான மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறிய அமைச்சர்!

அரியலூர் அருகே நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலுக்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மார்க் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். இந்நிலையில், மாணவி கனிமொழி நீட் தேர்வை கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ளார். நீட் தேர்வு கடினமாக இருந்ததால் தேர்வை சரியாக எழுதவில்லை என தந்தையிடம் கூறி மன உளைச்சலில் இருந்த மகளை தந்தை தேற்றியுள்ளார்.

எனினும் மருத்துவ கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேற்று தனிமையில் வீட்டில் இருந்த கனிமொழி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவியின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்திய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்சிவசங்கர், “நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நேற்று சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, இதுபோன்ற செயல்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடாமல் மனதை திடப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். இதற்காக மனதளவில் மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி கனிமொழியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தி.மு.க சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

Also Read: “இடஒதுக்கீட்டில் சீட் கிடைத்துவிடும் என்று ஆறுதல் கூறியும் இப்படி பண்ணிட்டா” : மாணவியின் தந்தை உருக்கம்!