Tamilnadu

"2 ஆண்டுகளில் கோயிலுக்கு சொந்தமான 311 ஏக்கர் நிலம் மாயம்”: RTI தகவல் மூலம் அம்பலம்- பொதுமக்கள் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற 'அத்திவரதர் கோயில்' என அழைக்கப்படும் காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜபெருமாள் கோவிலில், திருக்கோயிலுக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள பலநூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.

திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களின் விவரம் அடங்கிய பதாகையை கோயில் நிர்வாகம் பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வைக்கவேண்டும், நிலங்களில் இருந்து பெறப்படும் வாடகை பாக்கி விவரங்கள் எவ்வளவு என்பது என்பது குறித்து கோயில் வளாகத்தில் விளம்பரப் பலகையை வைக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள பல முக்கிய கோயில்களில் பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் நிலங்கள் எவ்வளவு, வாடகை பாக்கி எவ்வளவு நிலுவையில் உள்ளது மற்றும் சொத்து விவரம் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டன. ஆனால் வரதராஜ பெருமாள் கோவிலில் மட்டும் இதுபோல் சொத்து விவரம் அடங்கிய பாதாகைகள் வைக்கப்படவில்லை.

இது தொடர்பாக காஞ்சிபுரத்தை சேர்ந்த அ.டில்லிபாபு என்ற பக்தர் கடந்த 2019 ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி அன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அந்த விண்ணப்பத்தின் மீது கோயில் நிர்வாகம் அளித்த பதில் கடிதத்தில் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 448.43 ஏக்கர் உள்ளது எனத் தகவல் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி மற்றொரு பக்தர் அண்ணாமலை என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட தகவலுக்கு வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகம் கோயிலுக்கு சொந்தமாக 177.20 ஏக்கர் நிலங்கள் மட்டும் உள்ளது என தகவல் அளித்துள்ளது.

இருவேறு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட விண்ணப்பங்களுக்கு நிலங்கள் குறித்து முன்னுக்குப் பின் முரணாக தகவலை கோயில் நிர்வாகம் அளித்துள்ளது.

பல நூறு கோடி ரூபாய் மதிப்புடைய 311.23 ஏக்கர் நிலங்கள் மாயமாகி உள்ளது என்ற தகவல் தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்துள்ளது, பொதுமக்களையும் பக்தர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Also Read: “இனிமே எங்கேயும் இப்படி நடக்கக்கூடாது”: நீட் தேர்வால் பலியான மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல்கூறிய அமைச்சர்!