Tamilnadu

மனநலம் பாதிக்கப்பட்டவரை கொடூரமாக அடித்து கொலை செய்த குடும்பம் : நடந்தது என்ன ?

விழுப்புரம் மாவட்டம், சே.பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் வீரமுத்து மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களுக்கு எதிர்வீட்டில் சுந்தரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுந்தரம் குடும்பத்தினர் நேற்று இரவு விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளனர். நிலத்தில் வேலை அதிகம் இருந்ததால் அவர்கள் அங்கேயே இரவு முழுவதும் இருந்துள்ளனர்.

அந்த நேரத்தில் வீரமுத்து திடீரென சுந்தரத்தின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளார். பின்னர் அதிகாலையில், சுந்தரத்தின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுந்தரத்தின் குடும்பத்தினர் வீரமுத்துவை கட்டையால் கொடூரமாக அடித்துள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வீரமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து சுந்தரத்தின் மகன்கள் விஜயகுமார், ராஜேந்திரன் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தரத்தின் மனைவியை போலிஸார் தேடி வருகின்றனர்.

Also Read: காசு தரலனா புகார் கொடுப்பியா? போதையில் டீக்கடையை துவம்சம் செய்த அடாவடி பேர்வழி - CCTVயால் சிக்கிய இளைஞர்!