Tamilnadu

குடி போதைக்கு அடிமையான மகன்: கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து - சென்னையில் பகீர் சம்பவம்!

சென்னை எம்.ஜி.ஆர் நகர், சூளை பள்ளம், வெங்கட்ராமன் தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (48). இவர் சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் (21) என்கின்ற மகன் உள்ளார்.

பிரகாஷ் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதன் காரணமாக ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்த பிரகாஷ் எப்பொழுதாவது பெயிண்டிங் வேலைக்கு செல்வதும் உண்டு என அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குடித்துவிட்டு தனது வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்பொழுது தனது மகன் போதைக்கு அடிமையானது கண்டு வருத்தப்பட்ட தந்தை செல்வம் பிரகாஷை கண்டித்துள்ளார். இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது வீட்டிற்குள் சென்று கத்தியை எடுத்து வந்து செல்வத்தினை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர் நகர் போலிஸார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடிபோதையில் தனது தந்தையையே கத்தியால் குத்தி கொலை செய்த பிரகாஷை கைது செய்த போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: முக்கிய சாட்சிகளிடம் 5 மணிநேரம் தீவிர விசாரணை: வெளியான பகீர் தகவல்கள்- விஸ்வரூபமெடுக்கும் கொடநாடு வழக்கு!