Tamilnadu

“விநாயகர் சிலை கரைக்க சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி” : திருவள்ளூரில் நடந்த சோகம்!

திருவள்ளூர் அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி மாலையில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை நீரில் கரைக்க சென்ற இரு பள்ளி மாணவர்கள் தவறி விழுந்து பலியான சம்பவம் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி அனைவரது வீடுகளில், வழிப்பட்ட விநாயகர் சிலைகள் மாலையில் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது

திருவள்ளூர் அடுத்த செவ்வாபேட்டை சிறுகடல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகன் ஷ்யாம் விக்னேஷ் வயது (13) செவ்வாபேட்டை அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதேபகுதியை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் மோனிஷ் வயது (12) திருநின்றவூர் ஜெயா பள்ளியில்7 -ம்வகுப்பு படித்து வந்தான்.

இவர்கள் நேற்று மாலை விநாயகர் சிலை கரைப்பதற்காக பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய் அருகே சென்றனர். விநாயகர் சிலையை தூக்கி வீசுவதற்கு பதிலாக அதில் இறங்கி போடுவதற்காக இறங்கியுள்ளனர். அப்போது நிலைதடுமாறி கால்வாயில் விழுந்து இருவரும் தண்ணீரில் அடித்துச் சென்று விட்டனர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தண்ணீரில் அடித்துச் செல்வதை பார்த்த அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் சிறுவர்களை தேடினர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில்திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இரவு வெகுநேரமாகியும் கிடைக்காததால் பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின்மாயமான இரு சிறுவர்களை தேடினர். பின்னர் சிறுகடல் பகுதியில் சிறுவர்களின்‌ உடல்களை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து செவ்வாப்பேட்டை போலிஸார் இரண்டு சிறுவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவிலங்கும் பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு செல்லும் கால்வாயில் குளிக்க துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ குழந்தைகளுடன் யாரும் போகக் கூடாது என மாவட்ட நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும் இந்த கால்வாயில் விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலையை நீர்நிலைகளில் கரைக்க சென்ற 2 சிறுவர்கள் கிருஷ்ணா கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: விடுமுறைக்கு சென்ற இடத்தில் விபரீதம்.. ஆனந்தமாய் விளையாடிய இரண்டு குழந்தைகள் பலி - இன்று தந்தை தற்கொலை!