Tamilnadu

”18 ஆண்டுகளாக காத்திருந்த விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றிய முதலமைச்சர்” - அமைச்சரின் அட்டகாச அறிவிப்பு!

18 ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இந்தாண்டு 1 லட்சம் இலவச மின் இணைப்புகளை முதலமைச்சர் வழங்க உள்ளார் என் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் உளுந்தூர்பேட்டையை தொகுதியில் விவசாயிகளுக்கு விவசாய மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளித்து பேசியதாவது,

தமிழ்நாடு முழுவதும் 4,52,277 விவசாய இலவச மின் இணைப்புக்காக காத்திருந்து வருகின்றனர். இலவச மின் இணைப்புக்காக 18 ஆண்டுகளாக விவசாயிகள் காத்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாய மக்களின் எண்ணங்களை ஈடு செய்யும் வகையில் தமிழ்நாடு முதல்வர் இந்த ஆண்டு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கவுள்ளார்.

இதன் அடிப்படையில் முதல்வர் விவசாயிகளுக்கு வழங்கவுள்ள 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் மூலம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 4554 விவசாயிகளுக்கும் மிக விரைவில் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

Also Read: திருப்பரங்குன்றத்தில் கல்லூரி அமைக்கக் கேட்ட அதிமுக : தரவுகளுடன் பதிலடி கொடுத்த அமைச்சர் பொன்முடி!