Tamilnadu
‘நாங்க யோசிச்சிட்டுத்தான் இருந்தோம்; அதுக்குள்ள…’ என இழுத்த EPS… உடனடி தீர்வு சொன்ன முதலமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் பேரவை நிகழ்வுகளை நேரலை செய்வது குறித்து நாங்களும் ஆலோசித்தோம். ஆனால் அதற்குள் ஆட்சி முடிந்துவிட்டது என்றார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பேரவைத் தலைவர் அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் முழுமையாகப் பேசி, அதை நான் முழுமையாகக் குறிப்பெடுத்துக் கொண்டு, பதிலுரை ஆற்றுகிறபோது, அவற்றிற்கெல்லாம் விளக்கமாக நான் பதில் சொல்லப் போகிறேன். இருந்தாலும், நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி குறித்தும் சொன்னார்.
நாங்கள் ஒரு முறை அல்ல - பல ஆண்டு காலமாகத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த நீங்கள், அதைச் செய்யவில்லை. ஆனால், தேர்தல் அறிக்கையிலே நாங்கள் சொல்லியிருக்கிறோம். சட்டமன்றக் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், அந்த முயற்சியிலே இன்றைக்கு இறங்க முடியவில்லை.
நிச்சயமாக, உறுதியாக சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கக்கூடிய நம்முடைய சட்டமன்றத்தில் கூட்டத் தொடர் நடைபெறுகிறபோது, நிச்சயமாக நேரடியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவோம். அதேபோல, தொடக்கத்திலே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் பேசுகிறபோது, உங்கள் சொந்த இல்லத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றினோம்; அதைத் தொடர வேண்டும் என்றும் எடுத்து வைத்தார்.
ஆனால், உண்மை நிலை என்னவென்று கேட்டால், எங்களிடம் கேட்பதைவிட, காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டால் தெரியும், அதன் லட்சணம் என்னவென்று. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் தரமற்றவையாக இருக்கின்றன. போதிய அடிப்படை வசதிகள் இல்லை. விண்ணப்பங்கள் செய்தும், முன்பணம் செலுத்தியும், வெகுநாட்களாக காத்திருக்க வேண்டிய ஒரு நிலை இருக்கிறது.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அதில் விண்ணப்பித்தவர்கள் பல பேர் ஓய்வு பெற்றுச் சென்று விட்டார்கள். இதுதான் இருக்கக்கூடிய சூழ்நிலை. ஆனாலும், இந்த அரசைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக நாங்கள் கைவிட மாட்டோம். அதை இன்னும் சிறப்பாக, காவலர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய வகையிலே அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
பொருளாதார அவசரநிலை பிறப்பிக்கப்படுமா? : பொதுமக்கள் அச்சம் - பிரதமர் மோடிக்கு ரவிக்குமார் எம்.பி கேள்வி!
-
“சட்டப்பேரவையில் இப்போதும் உடன்பிறப்புகள் உருவில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” : ப.திருமாவேலன்!
-
“தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயவோடுதான் புதிய ஆட்சி” : விஜய்க்கு நினைவூட்டிய முரசொலி!
-
”மக்கள் கொடுத்திருக்கும் பொறுப்பு.. கடுமையாக உழைப்பேன்!” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
நாளை கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை... எதிர்க்கட்சித் தலைவராகும் உதயநிதி... - விவரம் உள்ளே!