Tamilnadu

“இங்கே வந்ததுமே 1996க்கு போய்ட்டேன்” - மலரும் நினைவுகள் பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்குதல், பணி நியமன ஆணை வழங்குதல் ஆகிய நிகழ்ச்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

சிங்காரச் சென்னை 2.0 தூய்மை பணிகளுக்காக ரூ.36.52 கோடி மதிப்பில் பேட்டரியால் இயங்கும் 1,684 மூன்று சக்கர வாகனங்கள், 15 கம்பாக்டர் இயந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும், மாநகராட்சி பணியின்போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 195 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி ஆணையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மாநகராட்சி வளாகத்திற்குள் வந்ததும் என் நினைவுகள் 1996-க்கு சென்றுவிட்டது. இந்தச் சாலை வழியே பயணம் செய்யும் போதெல்லாம் ரிப்பன் மாளிகையை பார்த்துக்கொண்டேதான் செல்வேன்.

ரிப்பன் மாளிகையை பார்க்கும்போது நான் மேயராக இருந்த நினைவுதான் வருகிறது. மக்கள் வாக்கை பெற்ற முதல் மேயராக இங்குதான் பதவியேற்றேன். மக்கள் பணியாற்றுவதுதான் மேயரின் பணி என்று கருதிச் செயல்பட்டேன்.

சென்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்” என உருக்கமாகப் பேசினார்.

Also Read: 2 ஆண்டு போராட்டத்திற்கு தீர்வு... டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த அமைச்சர் செந்தில்பாலாஜி!