Tamilnadu

முதியவரை காதல் திருமணம் செய்த மகள்; மன உளைச்சலில் பெற்றோர் தற்கொலை - அவிநாசியில் சோக நிகழ்வு!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குன்னத்தூர் அருகே பொளையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (65). இவரது மனைவி சுமதி (55). இவர்களுக்கு ஜனனி (23) என்ற மகள் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி டாக்டருக்கு மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

ஜனனிக்கு அதே பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை நடத்தி வரும் சம்பத் (41) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஜனனியின் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த ஜனனி செய்வதறியாமல் இருந்துள்ளார்.

தற்போது அரசு அறிவித்த தளர்வுகளால் மீண்டும் கல்லூரி திறக்கப்பட்டது. இதை நல்வாய்ப்பாக நினைத்த ஜனனி கோவையில் சம்பத்தை நேற்று திருமணம் செய்துள்ளார். இதையடுத்து இரவு தனது தந்தையின் வாட்ஸ் அப்பிற்கு கோவையில் தனது காதலனுடன் திருமணம் செய்து கொண்டதாகவும், அதற்கான போட்டோவையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதனை பார்த்து மனமுடைந்த ஜனனியின் தாய், தந்தை இருவரும் வாழைப்பழத்தில் விஷ மாத்திரையை வைத்து சாப்பிட்டுவிட்டு தூக்கு மாட்டிக்கொள்ள தயாரான நிலையில் விஷ மாத்திரையால் மயக்கமானவர்கள் உயிர் அப்படியே பிரிந்துள்ளது.

இன்று காலை வீட்டிற்று வந்த உறவினர் கதவு தாழிடாமல் இருந்ததால் உள்ளே சென்று பார்த்த போது கணவன் மனைவி இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களுக்கு அருகில் தெண்ணை மரத்திற்கு பயன்படுத்தப்படும் கொடிய விஷமான திம்மட் என்ற குருணை மருந்து பாட்டில்களும் கிடந்துள்ளது.

இதுகுறித்து குன்னத்தூர் போலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “கை, கால்களை வெட்டி, முகத்தை பிளேடால் கிழித்து காதலி கொடூரமாக கொலை” : காதலன் சொன்ன அதிர்ச்சி காரணம்!