Tamilnadu

“வ.உ.சி புகழை பறைசாற்றும் தமிழ்நாடு அரசு” : முதல்வர் வெளியிட்ட 14 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய 150-வது பிறந்த நாள் விழாவினையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 14 அறிவிப்புகளை வெளியிட்டார்

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு : - “பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே பேசியிருக்கக்கூடிய பல்வேறு கட்சியினுடைய தலைவர்கள்,அயோத்தியதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்; நன்றியும் தெரிவித்திருக்கிறீர்கள்; பாராட்டும் தெரிவித்திருக்கிறீர்கள்.

அதேநேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் ஈஸ்வரன் அவர்கள், வ.உ.சி. அவர்களுடைய 150-வது பிறந்த நாள் வருகின்றது. எனவே, அதனை அரசு விழாவாக, அவரைப் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். என்னுடைய முதல் சுதந்திர தின உரை - நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, என்னுடைய முதல் சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். வ.உ.சி. அவர்களுடைய 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று நான் அறிவித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150-வது ஆண்டாக வருகிற காரணத்தால், 14 அறிவிப்புகளை நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.

• சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சி அவர்கள் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.

• தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி வ.உ. சிதம்பரனார் சாலை' என அழைக்கப்படும்.

• தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவைச் சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் முழு உருவச் சிலையானது, பூங்காவில் அமைக்கப்படும்.

• செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் அவர்கள் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி - ஒளி காட்சி அமைக்கப்படும்.

•வ.உ.சிதம்பரனார் அவர்கள் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.

• திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.

• வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்கள் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

• திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

• கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது' ஆண்டுதோறும் கையாக வழங்கப்படும். விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

• கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மறைந்த நவம்பர் 18 ஆம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.

• இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசுக் கட்டடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பெயர் சூட்டப்படும்.

• பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.

• தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் அவர்கள் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெறும்.

• தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவைமுழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “அயோத்திதாசரின் நினைவாக வடசென்னைப் பகுதியில் மணிமண்டபம் அமைக்கப்படும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!