Tamilnadu

ரூ.10,600 கோடி அந்நிய செலாவணி மோசடி.. 12 வருடங்களுக்கு பிறகு சிக்கலில் Flipkart? - ஐகோர்ட் புதிய உத்தரவு!

10,600 கோடி ரூபாய் அந்நிய செலாவணி மோசடி தொடர்பான நோட்டீஸை எதிர்த்து ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை மூன்று வாரத்தில் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது. மேலும் அந்நியச் செலாவணி மோசடி தொடர்பாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் நிறுவனர்கள் உட்பட 9 பேருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவர்களுக்கு 1.35 பில்லியன் டாலர் (10,600 கோடி) அபராதம் விதித்ததோடு, அதை ஏன் சந்திக்கக் கூடாது என்று அதற்கான உரிய விளக்கத்தை தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து , ஃப்ளிப்கார்ட் நிறுவனர்களில் ஒருவரான சச்சின் பன்சால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை அமலாக்கப்பிரிவு இந்த நோட்டீஸை அனுப்பியதால் இவர் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார்.

அந்த மனுவில் அந்த நிறுவனத்திலிருந்து தான் 2010ஆம் ஆண்டு விலகி விட்டதாகவும் தனக்கும் அந்நிறுவனத்துக்கும் தற்போது தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பலமுறை இதுகுறித்து அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளதாகவும் 12 வருடங்கள் கழித்து தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், எனவே நோட்டீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அமலாக்கத்துறை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து 3 வாரத்துக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

Also Read: “'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது” : மனுதாரருக்கு ‘குட்டு’ வைத்த ஐகோர்ட்!