Tamilnadu

தொடரும் குழந்தைகள் மீதான வன்முறை.. குழந்தைகளுக்குச் சூடு வைத்த 2-வது மனைவி கைது!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு. கூலி தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சித்தார்த், நித்திஷ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இதையடுத்து கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஈஸ்வரி 2018ம் ஆண்டும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பிறகு ஒரு வருடம் கழித்து வேணி என்ற பெண்ணை சேட்டு திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இவர்களுடன் முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளும் வளர்ந்து வந்தனர். காலையில் வேலைக்குச் சென்றால் இரவுதான் சேட்டு வீட்டிற்கு வருவார். வேணிக்குக் குழந்தை இல்லாததால், முதல் மனைவியின் இரண்டு குழந்தைகளுக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

மேலும், இது குறித்து தந்தையிடம் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுவர்களுக்குச் சூடுவைத்து சித்ரவதை செய்துள்ளார். அப்போது வலி தாங்க முடியாத சிறுவர்கள் இது குறித்து அதேபகுதியில் இருக்கும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களின் உடல்களிலிருந்த காயங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வேணி மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வேணியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரண்டுநாட்களுக்கு முன்புதான் பெற்ற குழந்தையைத் தாயே கொடூரமாக அடித்து கொடுமைப் படுத்திய சம்பவம் அடங்குவதற்குள், முதல் மனைவியின் குழந்தைகளுக்கு இரண்டாவது மனைவி சூடுவைத்த சித்ரவதை செய்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: குழந்தை மீதான வன்முறை : ‘காதலன் சொல்லித்தான் அடித்தேன்’ - கைதான தாயார் கொடுத்த பகீர் வாக்குமூலம் !