Tamilnadu

மதுபோதையில் மனைவி அடித்து கொலை - தோட்டத்தில் புதைத்துவிட்டு தேடுவது போல் நாடகம் ஆடிய கணவன்: நடந்தது என்ன?

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் காலனி தெருவை சேர்ந்தவர் பாலையன். இவர் விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி வடுவம்மாள் இவர்களுக்கு அபிராமி என்கிற மகள் உள்ளார். இவர் திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

பாலையன் தொடர்ந்து மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மதுபோதையில் இருந்த பாலையன் மனைவி இடையே தகராறு நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை காலை முதல் வடுவாம்பாளை காணவில்லை என கணவர் மற்றும் அருகே உள்ள வீடுகளில் உள்ளவர்கள் தேடிவந்துள்ளனர். தொடர்ந்து இவரது வீடு மற்றும் தோட்டத்தில் தேடியுள்ளனர்.

அப்போது தோட்டத்தின் பின்புறம் சந்தேகத்திற்கு இடமான முறையில் மண் குவிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து உறவினர்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் தகவல் தெரிவித்ததின் பேரில் போலிஸார் நேரில் ஆய்வு செய்த போது, கணவர் மனைவியை கட்டையால் தாக்கி அடித்து கொலை செய்து புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடலை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் மனைவியை அடித்துக் கொலை செய்து தோட்டத்தில் புதைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கல்லூரிகள் திறப்பு : ஆர்வமுடன் கல்லூரிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகள் !