Tamilnadu

பாராலிம்பிக்ஸில் 2வது தங்கம் வென்றது இந்தியா : ஒரே நாளில் 3 முறை உலக சாதனையை முறியடித்த சுமித் அண்டில்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள நிலையில், ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் F64 பிரிவில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்றார். தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் சுமார் 68.55 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார் சுமித் அண்டில்.

அதுமட்டுமல்லாது கொடுக்கப்பட்ட மூன்று வாய்ப்பையும் மிகச் சரியாக பயன்படுத்திய, சுமித் அண்டில் தனது முதல் ஈட்டி எறிதலில் 66.95 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் அதனைவிட கூடுதலாக 68.08 மீட்டர் தூரம் எறிந்து 2வது உலக சாதனை படைத்தார். இறுதியாக தங்க பதக்கத்தை உறுதி செய்த நிலையில் மூன்றாவது வாய்ப்பில், 68.55 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார் சுமித் அண்டில். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டி ஒன்றில் அவர் 62.88 மீட்டர் ஈட்டி எறிந்ததே இதுநாள் வரை உலக சாதனையாக இருந்தது.

23 வயதாகும் சுமித் அண்டில் அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற வெண்கல பதக்கம் பறிப்பு: என்ன காரணம் ?