Tamilnadu

குடிபோதையில் தகராறு... வாலிபர் ஓட ஓட வெட்டி படுகொலை: புதுக்கோட்டையில் பயங்கரம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் செல்வகணபதி. இவர் குடித்துவிட்டு கலிபுல்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் செல்வகணபதியை அடித்து, அவரை வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர். பிறகு செல்வகணபதி அவர்களிடம் இருந்து தப்பிச் சென்று பள்ளிவாசல் மண்டலத்தில் மறைந்துகொண்டார்.

இவரைப் பின்தொடர்ந்த வந்த அவர்கள் செல்வகணபதி இல்லாததைப் பார்த்து திருப்பிச் சென்றது. இதை மறைந்திருந்து பார்த்துக்கொண்டிருந்த செல்வகணபதி அவர்கள் சென்றுவிட்டதாக நினைத்து வெளியே வந்துள்ளார்.

பின்னர் செல்வகணபதி ஆலங்குடியில் இருக்கும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த அந்த மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தம்பிச் சென்றுவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்துபேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியிருப்பு பகுதியில் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 11 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு நிரபராதி என தீர்ப்பளித்த ஐகோர்ட்: கொலை வழக்கில் திடீர் திருப்பம்!