Tamilnadu
SC,ST விவசாயிகளுக்கு 100% மானியத்தில் கிணறு, மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி: வேளாண் அமைச்சர் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கரூர், நாகப்பட்டினம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அரசு வேளாண் கல்லூரிகள், ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்க்கிணறுகள் அமைத்து, மின்மோட்டாருடன் நுண்ணீர்ப்பாசன வசதி அமைத்துத் தருவதற்காக, ரூ.12 கோடி செலவிடப்படும் என்பது உள்ளிட்ட 25 திட்டங்களை அறிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'விவசாயிகளுடன் ஒரு நாள்' எனும் திட்டத்தின்படி, ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தங்கள் தொகுதியில் உள்ள கிராமத்துக்குச் சென்று விவசாயிகள் கருத்தைக் கேட்க வேண்டும் எனவும், விவசாயிகள் கருத்துகளைக் கேட்டு அதைத் தீர ஆராய்ந்து அவர்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ''ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்துத் தருவதற்காக ரூ.12 கோடி செலவிடப்படும்.
அரியலூர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர் ஆகிய எட்டு மாவட்டங்களில் உள்ள 200 ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளின் நலனுக்காக, தமிழக வரலாற்றில் முதன்முறையாக 2021-2022ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளை அல்லது குழாய்க் கிணறுகள் அமைத்து, மின் வசதியுடன், மின்மோட்டார் பொருத்தி, நுண்ணீர்ப் பாசன வசதிகள் 100 சதவீத மானியத்தில் மேற்கொள்ளப்படும். இதற்காக 12 கோடி ரூபாய் நிதி செலவிடப்படும்.
அறுவடைக்குப் பின் சேதமில்லாமல் வேளாண் விளைபொருட்களைச் சேமித்து, நல்ல விலை கிடைக்கும்போது சந்தைப்படுத்துவதில் கிடங்குகள் மிகவும் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, 2021- 2022ஆம் ஆண்டில், திருப்பூர், புதுக்கோட்டை, நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில், திருப்பூர் மாவட்டம் பூளவாடி, புதுக்கோட்டை மாவட்டம் சிதம்பர விடுதி, நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி, ஈரோடு மாவட்டம் பர்கூர் ஆகிய இடங்களில் தலா 250 மெட்ரிக் டன் கொள்ளளவுள்ள சேமிப்புக் கிடங்குகள் ரூ.2 கோடி செலவில் கட்டப்படும்''. என அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
வயநாடு தொடர்ந்து மற்றொரு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி : எந்த தொகுதி? என்ன காரணம்?
-
மணிப்பூர் வன்முறை - கைகட்டி வேடிக்கை பார்த்த ஒன்றிய பா.ஜ.க. அரசும் குற்றவாளி அல்லவா? : முரசொலி!