Tamilnadu

டீ பொடிக்கு பதில் போதை பவுடர்.. ₹7 கோடி போதை பொருளுடன் சிக்கிய கடத்தல் கும்பல்; சென்னை அருகே பயங்கரம்!

சென்னையில் மெத்தபெட்டமைன் எனும் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காரனோடை சுங்கச்சாவடி அருகே அதிகாரிகள் லாரி ஒன்றை சோதனை செய்தனர்.

அதில் மரப்பெட்டிகளில் தலா ஒரு கிலோ எடை கொண்ட 8 டீ பாக்கெட்டுகள் இருந்துள்ளது. சந்தேகத்தில் அதிகாரிகள் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்தபோது உயர் ரக மெத்தபெட்டமைன் என்னும் போதைப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது.

லாரி ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் என்பவரை விசாரணை செய்ததில் அவர் கொடுத்த தகவலின் பேரில் மீஞ்சூர் சுங்கச்சாவடி அருகே மாரியப்பன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

ரமேஷ், மாரியப்பன் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தோ மியான்மர் எல்லை பகுதிகளில் இருந்து மணிப்பூர் வழியாக போதை பொருளை கடத்தி வந்ததும் சென்னையில் சிறுசிறு பொட்டலங்களாக போதைப்பொருளை தயாரித்து நட்சத்திர விடுதிகளில் நடைபெரும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு விநியோகம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது சென்னையில் வசித்து வரும் ரமேஷ், மாரியப்பன் இருவரும் இதற்கு முன்பு மணிப்பூர் மாநிலம் மோரே என்னும் பகுதியில் வசித்து வந்துள்ளனர். அங்கிருந்து தொடர்ச்சியாக சென்னைக்கு போதைப்பொருள் பலமுறை கடத்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரமேஷ் மாரியப்பன் மற்றும் ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் ஆகிய மூவரையும் கைது செய்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.