Tamilnadu

“Press, On Govt. Duty ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களில் சோதனை நடத்துங்கள்” : போலிஸாருக்கு அதிரடி உத்தரவு!

‘அ’ அல்லது ‘G’ எழுத்து மற்றும் ‘Human Rights' என்று எழுதியுள்ள தனியார் வாகனங்களில் சோதனை நடத்தும்படி சோதனைச்சாவடிகளில் உள்ள போலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான தனியார் வாகனங்கள் அரசு வாகனங்கள் போல ‘G’ அல்லது ‘அ’ எழுத்துடன் சுற்றி வருகின்றன. சிலர் Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer என்ற ஸ்டிக்கர் அல்லது போர்டு வைத்து சொந்த வாகனங்களை இயக்கிவருகின்றனர்

இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டியிருப்பவர்கள் வாகனச் சோதனையின்போது போலிஸாருக்கு ஒத்துழைப்பதில்லை. எதற்கு வீண் பிரச்சனை என போலிஸாரும் விட்டுவிடுகின்றனர்.

ஆனால், இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களின் மூலம் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதைத்தொடர்ந்து இதுபோன்ற ஸ்டிக்கருடன் வரும் வாகனங்களை நிறுத்தி, சோதனை செய்ய காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், சோதனையின்போது தகராறில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் சோதனைச் சாவடிகளில் பணிபுரியும் போலிஸாருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘அ’ அல்லது ‘G', Human Rights, Police, On Govt. Duty, Press, Lawyer போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சோதனை செய்து தனியாக அறிக்கை தயார் செய்ய வேண்டும். அதில் அவர்கள் வைத்துள்ள ஸ்டிக்கர் அல்லது போர்டின் விவரங்கள் இருக்கவேண்டும்.

மேலும், S.No., Date & Time, Vehicle Registration No., User name, Address, Cell No., Office address, Designation, From, To, Vahan app details ஆகியவை இருக்க வேண்டும். இந்த வாகனங்களின் விவரங்களை தினமும் காவல் உதவி ஆணையர் அல்லது டி.எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

Also Read: “இனியொரு மரணம் வேண்டாம்; பேனர் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்”: மு.க.ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு!