Tamilnadu

“தப்பு பண்ணலைன்னா எடப்பாடி பழனிசாமி ஏன் பதறணும்? வழக்கை சந்திக்க வேண்டியதுதானே?” : திருமாவளவன் கேள்வி!

கொடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் சயான் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அச்சத்தில் இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க அரசு பழிவாங்குவதாக அவதூறு பரப்பி வருகிறார்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “சாதி உணர்வுதான் மதவெறிக்கு அடித்தளமாக அமையும் என்கிற அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, சங்க் பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த சதித் திட்டம் தெரியாமல் மக்கள் இரையாகிறார்கள், பலியாகிறார்கள்.

இதை முறியடிக்க சமூக நீதிச் சமூகங்கள் ஒற்றுமையாக்க வேண்டும். விரைவில் இந்தியா பொதுத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. யார் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்பது முதன்மையான பிரச்னை அல்ல. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தான் தற்போது அவசியம். அதன் பிறகு பிரதமர் யார் என்பதற்கான விடை கிடைத்து விடும்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பது உட்பட சமூக நீதிக்காக தி.மு.க அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வி.சி.க துணை நிற்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டம். இது அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

அடுத்தகட்டமாக, பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோருக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றால் அவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. இந்த வழக்கில் எங்களை குற்றம்சாட்ட முடியாது என்று அவர்கள் சொல்லலாம்.

அவர்கள் மீது எவ்வித தவறும் இல்லாத பட்சத்தில், அவர்கள் ஏன் பதற வேண்டும்? அவ்வழக்கில் தவறு இருப்பதாக அரசு கருதினால், விசாரணைக்கு அவர்கள் இருவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.