Tamilnadu

"சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்தபிறகு போக்குவரத்து துறையில் புதிய பணி நியமனங்கள் நடைபெறும்":அமைச்சர் உறுதி!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தபிறகு, போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இருந்து 14 வழித்தடங்களில் 8 நகரப் பேருந்துகள் உட்பட 12 பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், “தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்கள் படிப்படியாக இயக்கப்படும். கடந்த ஆட்சியைப்போல இனிமேல் போக்குவரத்துத் துறையில் ஊழல் நடக்காது.

புதிய பேருந்துகளை ஜெர்மனியிலிருந்து வாங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 4,000 பேர் பற்றாக்குறையாக உள்ளனர். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து ஓட்டுநர், நடத்துநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “செப்.1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும்; தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது” : அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!