Tamilnadu

“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை இன்னும் வலுவுடையதாக வளர வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து - செப்டம்பர் 20 முதல் 30 ஆம் தேதி வரை, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி தலைமையில், நேற்று மாலை, காணொலி வாயிலாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்பட 19 கட்சிகள், காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றன.

இக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வரும் - கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் இக்கூட்டத்தில் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, ஹேமந்த்சோரன், சரத்யாதவ், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, திருமாவளவன், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 19 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர், எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கூட்டறிக்கையை வழிமொழிந்து, முதல்வர் அவர்கள் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு வருமாறு:-

“மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பா.ஜ.க அரசால் கூட்டாட்சிக் கொள்கை அழிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய நேரத்தில், எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது கட்டாயம். அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர், நமது ஒற்றுமையைக் கண்டது. இது இன்னும் வலிவுடையதாக வளர வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையினை தி.மு.கழகம் முழுமையாக ஆதரிக்கிறது” இவ்வாறு அப்பதிவில் கழகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்,

Also Read: மோடி அரசுக்கு பாடம்பு கட்ட கைக்கோர்த்த 19 எதிர்க்கட்சிகள்.. செப். 20 - 30 வரை நாடு தழுவிய போராட்டம்!