Tamilnadu

முன்புறத்தில் அலுவலக திறப்பு விழா; பின்புறத்தில் அதிமுக தொண்டர்களுக்கு மதுவிருந்து - திருப்பூரில் அவலம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து பல்லடம் பேருந்து நிலையம் எதிராக உள்ள பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.

பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பிவேலுமணி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் தமிழ்நாடு அரசின் கொரோனா தடுப்பு விதிகளை மதிக்காமல் 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

மேலும் அவருடன் செல்போனில் புகைப்படம் எடுக்க அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு அறையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்த அறைக்குள் வருவதற்கு தொண்டர்களுக்கு அனுமதி வழங்காமல் அறைக்கதவு மூடப்பட்டதால் தொண்டர்கள் உள்ளே வர தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்த நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது கட்சி தொண்டர்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் பின்புறம் நின்று மது அருந்தி கொண்டிருந்தது. தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ள நிலையில், அரசின் உத்தரவை காற்றில் பறக்க விடும் விதமாக முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்ட ஒரு விழாவில் 500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளி இன்றி கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.

Also Read: ஊரடங்கை மீறி மது விருந்து - சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க MLA உட்பட 25 பேர் கைது: குஜராத்தில் நடந்த அவலம்!