Tamilnadu
அடுத்தடுத்து 4 மரணங்கள்.. கொடநாடு கொலை,கொள்ளை விவகாரத்தில் அவிழும் முடிச்சுகள்: புதிதாக தனிப்படை அமைப்பு!
அ.தி.மு.க பொதுச்செயலாளரும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு தேயிலை தோட்டத்தில் உள்ள ஆடம்பர பங்களாவில் அதிமுகவின் பல்வேறு மிக முக்கிய கோப்புகள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் கொடநாடு தேயிலை தோட்டம் சசிகலாவின் முழு கட்டுப்பாட்டில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊழல் வழக்கில் சசிகலா நான்காண்டு சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், சசிகலா சிறைக்கு சென்று இரண்டு மாதத்தில் கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்ட நிலையில், பங்களாவில் இருந்த பல அ.தி.மு.க கோப்புகள் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்போதைய அரசியல் சூழலில் கொடநாடு பங்களாவிலிருந்து இரண்டு பொம்மைகள் மட்டுமே திருட்டுப் போனதாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரும், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினருமான கனகராஜ், சயான், மனோஜ், உதயன் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 2017 ஏப்ரல் 28ஆம் தேதி முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் சேலத்தில் வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
அதேநாளில் கோவை - பாலக்காடு சாலையில் இரண்டாவது குற்றவாளியான சயான் தனது மனைவி குழந்தையுடன் காரில் சென்றபோது மர்ம வாகனம் மோதியதில் சாயனின் மனைவி, குழந்தை ஆகியோர் துடிதுடித்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நடைபெற்று ஒரே வாரத்தில் கோடநாடு கணினி பொறியாளர் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்த 4 மரணங்கள் இவ்வழக்கில் பெரும் சர்ச்சையையும் சந்தேகத்தையும் எழுப்பிய நிலையில் சயான் மனோஜ் ஆகியோர் நான்கு வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட போது காவல்துறை மற்றும் நீதிபதிகளிடம் முன்னாள் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமியின் நண்பரும் அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் கூடலூர் பகுதியை சேர்ந்த மர வியாபாரி சஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக வாக்குமூலம் அளித்தனர்.
ஆனால், காவல்துறையினர் அப்போது வழக்கு வேறு திசைக்கு கொண்டு சென்று சயான், மனோஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கு தற்போது உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 13ம் தேதி கோத்தகிரி போலிஸார் சயானிடம் மீண்டும் மறு விசாரணை செய்ய வேண்டும் என்று மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா சாயானிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார் .
இதைத்தொடர்ந்து கடந்த 17ம் தேதி மாலை 3.30 மணி முதல் 6.30 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவுத், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ், கோத்தகிரி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தியதில் எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பெயரில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், அவருக்கு பல்வேறு வசதிகளை கூடலூரில் சேர்ந்த அ.தி.மு.க வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவன் செய்து தந்ததாகவும் சயான் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், சயான் அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சயான் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆதாரங்களை திரட்டுவதற்காக குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரோஷ் தலைமையில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் இரண்டு உதவி ஆய்வாளர்கள் நான்கு காவலர்களை கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டு ஆதாரங்களை திரட்டும் பணி தொடங்கியது. இதனிடையே குன்னூர் சிறையிலுள்ள மற்றொரு குற்றவாளியான மனோஜ்யிடம் விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!