Tamilnadu

“மாநில அரசின் மொழியிலேயே பதில் அளிக்க வேண்டும்” : மோடி அரசின் ஆதிக்கத்திற்கு ‘குட்டு’ வைத்த நீதிமன்றம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்காக தமிழகம், புதுச்சேரியில் தேர்வு மையம் அமைக்கவில்லை.

இப்பகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையமாவது அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம் மற்றும்  சி.ஆர்.பி.எப் பொது இயக்குனருக்கு அக்டோபர் 9-ல் கடிதம் அனுப்பினேன். இதற்கு ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நவம்பர் 9-ல் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனால் அதில் என்ன கூறியிருந்தார் என்பதை அறிய முடியவில்லை. இந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும். தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்பு சட்ட உரிமைகளுக்கும், 1963ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும்.

இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும். எனவே, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு உத்தரவை வெளியிட்டனர். அந்த உத்தரவில், “தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படை கல்வி தாய் மொழியிலேயே வழங்கப்பட வேண்டும். ஆனால் தற்போது ஆங்கில வழி கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

ஆங்கில மொழிக்கு பொருளாதார அடிப்படையிலேயே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எத்தகைய செய்தி ஆயினும், விளக்கம் ஆயினும் அதனை தாய்மொழியில் புரிந்து கொள்ளும்போதே முழுமையடைகிறது. இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு எந்த மொழியில் ஒன்றிய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதை மொழியிலேயே ஒன்றிய அரசு பதில் அளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது.

ஆனால் இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு இந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. விதியை மீறும் எண்ணமில்லை என ஒன்றிய அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் ஒன்றிய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற உத்தரவிடப்படுகிறது” எனக் குறிப்பிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Also Read: தொட்டால் உதிரும் சிமெண்ட்டை கண்டுபிடித்த ஓ.பி.எஸ்.. விரைவில் கிரிமினல் நடவடிக்கை?