Tamilnadu

மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.15 கோடி மணல் கொள்ளை; கண்டுகொள்ளாமல் இருந்த அதிமுக ஆட்சியாளர்கள்!

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

அதில், “ஒன்றிய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை தேர்வு செய்யப்பட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மதுரை மாநகராட்சியின் தலைமை பொறியாளரான அரசு என்பவர் தலைமையேற்று நடத்தி வந்தார்.

இந்த திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானத்திற்காக 30 அடிக்கு மேல் ஆழம் தோண்டப்பட்டது. அதில் வளமிகுந்த மணல் தோண்டப்பட்டது. அந்த மணல்களை கனிமவள துறையினருக்கு தகவல் தெரிவித்து ஓரிடத்தில் சேர்க்க வேண்டும். ஆனால் தலைமைப் பொறியாளராக இருந்த அரசு கனிமவளத்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் 15 கோடி ரூபாய் அளவிற்கு மணல்களை சட்டவிரோதமாக கடத்தி தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

அரசின் இடத்தில் இருந்து மணல்களை சட்டவிரோதமாக கடத்தியது குறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மனு செய்திருந்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொறியாளர் அரசு மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதியப்பட்டுள்ளது. இவரது அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது கணக்கில் வராத பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமாக மணல் கடத்தி விற்பனை செய்த பொறியாளர் அரசு மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி கிருபாகரன் துரைசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது போன்ற செயல்கள் கடுமையான குற்றமாக பார்க்க வேண்டும். எனவே மனு குறித்து நகராட்சி நிர்வாகத்துறை முதன்மைச் செயலாளர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் கனிமவள துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.