Tamilnadu

காணாமல் போன ரூ.1 லட்சம் கோடி? : ஒரு நாளைக்கு 83 கோடி ரூபாய் வட்டி - முறைகேடுகளை பட்டியலிட்ட அமைச்சர் PTR!

தமிழ்நாடு நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வெளியிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கடந்தகால அ.தி.மு.க அரசின் தவறான மேலாண்மை காரணமாக, வருடத்திற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இன்றி ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஊதாரித்தனமாக செலவிடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியாளர்களுக்கு அரசியல் உறுதியும், நிர்வாகத் திறமையும் இல்லை. அதுமட்டுல்லாது, அதிக அளவிலான பணம் இலவச திட்டங்கள், மானியங்களுக்கு செல்கிறது. மானியங்களால் பயன்பெறுவோர் குறித்த முறையான தகவல் இல்லை.

மேலும், வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும். குடிநீர் வடிகால் வாரியத்தின் கடன் ரூ.2,890.26 கோடியாக உள்ளது. 69 பொதுத்துறை நிறுவனங்களில் 26 நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.

மாநிலத்தின் வருவாயை உயர்த்துவதில் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2008-ம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரி மாற்றியமைக்கப்படவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்திற்கும், மின் வாரியத்துக்கும் உள்ளாட்சி அமைப்புகள் வைத்துள்ள கடன் ரூ.1,743.30 கோடி ஆகும். தமிழ்நாடு அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "அரசு பேருந்து 1 கி.மீ தூரம் ஓடினால் ரூ.59 நஷ்டம்"- கடந்த கால அ.தி.மு.க அரசின் நிர்வாக சீர்கேடு அம்பலம்!